85+ வாக்காளர்களுக்கான.. தபால் வாக்குகளை செலுத்தும்.. படிவங்கள் இன்று முதல் விநியோகம்

Meenakshi
Mar 20, 2024,12:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான பார்ம் 12டி வழங்கப்படுகிறது.


தமிழகத்தில் 2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க  வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் இன்று முதல் வருகின்ற 25ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான பார்ம் 12டி வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.




இதுகுறித்து சத்யபிரதா சாஹு கூறுகையில், தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள்  தொடர்பான விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை அலுவலர்கள் சென்று தபால் வாக்குகளுக்கான விருப்ப படிவம் 12டி வழங்கப்படும். இது கட்டாயம் அல்ல. விரும்பியவர்கள் மட்டும் படிவத்தை பூர்த்தி செய்து தரலாம். 


அதன்பின்னர் வாக்குப்பதிவுக்கு முன்னதாக விருப்ப படிவம் தந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட அலுவலர், வருவாய் காவல் துறையினர் குழுவாக சென்று தபால் வாக்கு படிவத்தை தந்து வாக்குப்பதிவு செய்த பின் அந்த படிவத்தை பெட்டியில் போடுவார்கள்.அதன்பின் இவ்வாறாக பெறப்படும் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்கப்படும். 


அனைத்துப் பணிகளும் முழுமையாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையில் நடைபெறும். தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முன்னரே முடித்துவிட்டது. தேர்தல் பணி ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வேட்புமனு தாக்கல் முடிந்த பின் இப்பணி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.