பொன்முடி  வழக்கில் இன்றே அப்பீல் செய்வோம்.. அவருக்கு விரைவில் விடுதலை கிடைக்கும்.. திமுக

Su.tha Arivalagan
Dec 21, 2023,07:13 PM IST

சென்னை: பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக இன்றே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும். அவருக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்று திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.


பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை என்பதால் பொன்முடியின் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோயுள்ளது. இந்த நிலையில் தீர்ப்புக்குப் பின்னர் பொன்முடியின் வழக்கறிஞரான என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.




அப்போது அவர் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாதவர். அவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர். அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட இந்த வழக்கின் ஆவணங்களை அவர் டீல் செய்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து எங்களுக்கு முன்பே தெரியவில்லை. சமீபத்தில்தான் தெரிய வந்தது. இதை நீதிபதி ஜெயச்சந்திரனிடமே கூட நாங்கள் கூறியபோது, முன்பே இதுகுறித்துக் கூறியிருந்தாலும் கூட நான் இந்த வழக்கிலிருந்து விலகியிருக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இது சட்ட ரீதியான பிரச்சினை இதை சுப்ரீம் கோர்ட்டில் நிச்சயம்  தெரிவிப்போம்.


இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் இன்றே மேல் முறையீடு செய்யப்படும். ஒட்டுமொத்த தீர்ப்பையும் நிறுத்தி வைக்க கோரிக்கை வைப்போம்.


பொன்முடி அவர்களின் மனைவி விசாலாட்சி தனியாக தொழில் செய்து வந்தார். அவருக்கு சொந்தமாக சித்தூரில் குடும்பச் சொத்தே 100 ஏக்கருக்கு உள்ளது. அவருக்கு அவரது சகோதரரும் பணம் கொடுத்துள்ளார். அவர் சரியான முறையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ததால்தான் சந்தேகம் என்று கூறி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமே பிரச்சினையாகும்.


பொன்முடிக்கு  எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தைத் திரட்ட முடியவில்லை என்று விசாரணை அதிகாரியே கூறியுள்ளார். இதையெல்லாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றார் என்.ஆர். இளங்கோ.