"எப்புர்ரா"... புக்கிங்  தொடங்கிய வேகத்திலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்கள்.!!

Su.tha Arivalagan
Sep 13, 2023,10:05 AM IST
சென்னை: 2024 பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய வேகத்திலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி வருகிறது. இதையொட்டி பொங்கலுக்கான ரயில் டிக்கெட்  புக்கிங் இன்று தொடங்கியது. ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. காலை 8 மணிக்கு ஆன்லைனில் புக்கிங் தொடங்கியதும் சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.

தற்போது வைகை  எக்ஸ்பிரஸ் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில்தான் டிக்கெட்கள் உள்ளன. மற்றபடி பெரும்பாலான தென் மாவட்ட ரயில்கள் நிரம்பி விட்டன.



ஜனவரி 12ஆம் தேதிகான முன்பதிவு நாளை தொடங்கும். ஜனவரி13-ம் தேதிக்கான ரயில்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ஆம் தேதியும், ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்பு செப்டம்பர் 17ஆம் தேதியும் தொடங்கும்.

ஜனவரி 14ம் தேதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருவதால் மக்கள் அலை அலையாக சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பார்கள். குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் லட்சக்கணக்கில் செல்வார்கள் என்பதால் ரயில்களுக்கு எப்போதுமே டிமாண்ட் இருக்கவே செய்யும். குறிப்பாக தீபாவளி, பொங்கல் சமயங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். இதனால் அந்த சமயங்களில் சிறப்பு ரயில்களும் விடப்படுவது வழக்கம்.