மக்களே ரெடியா.. பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு.. நாளை முதல் தொடக்கம்!

Manjula Devi
Sep 11, 2024,06:22 PM IST

சென்னை:   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் தொடங்க உள்ளது. 


2025ஆம் ஆண்டில் பொங்கல் விழா ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 16ஆம் தேதி காணும் பொங்கல், என தொடர்ந்து நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகைக்காக அரசு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தடபுடலாக  பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.




இந்த நிலையில் பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. ரயில்களில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட வேண்டும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதன்படி ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். அதேபோல் ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்வோர் செப்டம்பர் 15ஆம் தேதியும் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மேலும் பொங்கல் பண்டிகையின் போது  சொந்த ஊருக்கு செல்வோர்கள் முன்பதிவு செய்ய ரயில் நிலைய முன்பதிவு மையம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி என்ற இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்