பொங்கல் விடுமுறை.. அதிகரிக்கும் பயணிகள் கூட்டம்.. கிடு கிடுவென  உயர்ந்த விமான டிக்கெட்!

Meenakshi
Jan 13, 2024,05:52 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகை  மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது வழக்கம். பெரும்பாலான மக்கள் வேலை நிமித்தம் சொந்த ஊரை விட்டு வேலை கிடைக்கும் பகுதிகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். வருடம் முழுவதும் சொந்தங்களை பிரிந்திருக்கும் இவர்கள் பண்டிகை என்றால் தான் சொந்தங்களை பார்க்க வருவார்கள்.


அதுவும் பொங்கல்  பண்டிகையுடன் தொடர் விடுமுறையும் வருவதினால் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி விடுவார்கள். இப்படிப்பட்டவர்களின் நிலைமையினை பயன்படுத்தி, பேருந்து மற்றும் விமான பயண டிக்கெட்டின் விலையை உயர்த்தி வைப்பதால் மக்கள் வருடா வருடம் சிரமப்பட நேரிடுகிறது. பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களை நோக்கி வருபவர்களுக்கு இது மிகவும் சுமையாகவும் மாறி வருகிறது. 




முதலில் பேருந்துகளில்தான் தான் கட்டண உயர்வு இருந்தது.  ஆனால் இ்பபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி விமானங்களிலும் கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். இதனால் ஊருக்கு செல்வோமா? வேண்டாமா? என்று பயணிகள் யோசிக்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டண பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கத்தை விட மூன்று முதல் ஐந்து மடங்கு வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. இது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


விமான கட்டண விபரம்:


சென்னை டூ மதுரைக்கு வழக்கமாக விமானத்தில் செல்ல ரூ. 3,367 என விமானம் கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ. 17,262 ஆக உயர்ந்துள்ளது. 


சென்னை  டூ கோவைக்கு வழக்கமாக ரூ. 3,315 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.14,689 ஆக உயர்ந்தது. 


சென்னை டூ சேலம் செல்ல 2,290 என விமான கட்டணம் இருந்த நிலை தற்பொழுது ரூ.11,329 ஆக அதிகரித்துள்ளது. 


சென்னை டூ திருச்சிக்கு வழக்கமாக ரூ. 2,264 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,369 ஆக உயர்ந்துள்ளது.


சென்னை டூ தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,624 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.13,639 ஆக உயர்ந்துள்ளது.  இந்த கட்டண உயர்வால் பயணிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.


இதுக்கெல்லாம் எப்பப்பா என்ட் கார்டு போடப் போறீங்க!