பாஸ் பாஸ்.. பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போகப் போறீங்களா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

Meenakshi
Dec 13, 2023,06:12 PM IST
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான பேருந்து முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

பொங்கல், தீபாவளி நாட்களில் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள், குறிப்பாக சென்னையில் வசிப்போர் படு குஷியாகி விடுவார்கள். ஏன்னு கேட்கிறீங்களா, அப்ப தானே பாஸ் சொந்த ஊருக்கு போக முடியும், சொந்தங்களையும் பார்க்க முடியும் என்பதால். இத்தகைய சந்தோஷசத்தை ஏற்படுத்த கூடிய பொங்கல் பண்டிகை ஜனவரி 14ல் வருகிறது. 

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி முடிந்து விட்டது. இப்போது பஸ் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. தொடர் விடுமுறை கிடைப்பதினால் 2 நாட்களுக்கு முன்னரே கிளம்பிவிட நினைப்பார்கள் பெரும்பாலானவர்கள். அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்பதினால் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பேருந்து கட்டணங்களும் தாறுமாறாக உயரும். 



பெரும்பாலான மக்கள் பேருந்துகள் கிடைக்காமல்  சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் போகும் நிலையும் ஏற்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு  போக்குவரத்துத் துறை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம், டிக்கெட் முன்பதிவு, ஆம்னி பஸ்களில் கட்டணத்தைக் கட்டுப்படுத்துவது, உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தற்போது பொதுமக்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவை இன்று தொடங்கி உள்ளது. பயணிகள் நேரிலோ அல்லது முன்பதிவு மையங்களிலோ  www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்த சில மணித்துளிகளிலேயே டிக்கெட்டுகள் மளமளவென்று விற்று வருவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பாஸ் பாஸ் நீங்களும் டிக்கெட் போட்டாச்சா.. இல்லாட்டி போய் முதல்ல அதைப்  பண்ணுங்க!