அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.. ஏன்?

Su.tha Arivalagan
Sep 05, 2023,10:46 AM IST
சென்னை: சென்னை க்ரீன்வேஸ் சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்துப் பேசியதை சர்ச்சையாக்கி வருகிறார்கள். பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் இந்தப் பேச்சைக் கண்டித்துப் பேசி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். 



கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானின் துங்ர்பூரில் பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா  பேசும்போது, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சனாதன தர்மத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டினர்.  இதற்கு எதிராக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்போதும் ஒரு காவலர் என்ற சுழற்சி முறையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.