"விஜயலட்சுமி".. சீமானுக்கு போலீஸ் சம்மன்.. விசாரணைக்குப் பின் கைது செய்யப்படுவாரா?

Meenakshi
Sep 09, 2023,12:06 PM IST

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது பல்வேறு புகார்களை நடிகை விஜயலட்சுமி சுமத்தியுள்ளார். தன்னைக் கல்யாணம் செய்து கொண்டதாகவும், கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பான முக்கிய போன் ஆதாரங்கள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் அளித்துள்ளார். 


விஜயலட்சுமியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அவருக்கு மருத்துவ பரிசோதனையும் அளிக்கப்பட்டது. நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வாக்குமூலமும் பதிவு செய்துள்ளனர். அவருக்கு 8 முறை கரு உண்டாகி அதை கலைத்ததாக, சீமான் தனக்கு தொந்தரவு, தொல்லை, கொடுமை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார் விஜயலட்சுமி.


கருக்கலைப்பு நடந்ததா என்பதை உறுதி செய்வதற்காகவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜயலட்சுமி வழக்கில் நேற்று இரவு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செவ்வாய்க்கிழமையன்று ஆஜராவதாகவும், அதுவரை அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை போலீஸார் ஏற்றுக் கொண்டுள்ளனர். 


இந்த நிலையில், விஜயலட்சுமி விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.   இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக சீமானுக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும், விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க இப்படி மிரட்டுகிறார் என்றும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.


சீமானும் கூட சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டின்போது தன் மீது போகிற போக்கில் ஒரு பெண் சுமத்தும் குற்றச்சாட்டை தமிழ்நாட்டு மக்கள் நம்பக் கூடாது என்று ஆவேசமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.