வேலைக்கார பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியதாக.. பல்லாவரம் எம்.எல்.ஏ., மகன் மருமகள் மீது வழக்கு!

Meenakshi
Jan 19, 2024,07:07 PM IST

சென்னை: வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ இ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ. திருவான்மியூரில் உள்ள இவரது வீட்டில் வேலைக்காக ஒரு பெண் வேலைக்காக சேர்ந்துள்ளார். ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகிய இருவரும் அந்த பெண்ணை வெளியில் விடாமல், தொடர்ந்து வேலை வாங்கி வந்ததாகவும், அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன.


இந்நிலையில்,  ஆண்டோ மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில்  நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 




அந்த வாக்குமூலத்தில் தன்னை நிர்வாணப்படுத்தி, உடலில் சூடுபோட்டு, கரண்டியால் மார்பில் அடித்ததாக அவர் கூறியிருந்தார். விசாரணைக்குப் பின்னர் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


முன்னதாக இந்த விவகாரம் குறித்து முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து டிவீட் போட்டிருந்தார். இயக்குநர் பா. ரஞ்சித்தும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எம்எல்ஏ இ. கருணாநிதி விளக்கம்


எனது மகன் திருமணத்திற்குப் பின்னர் திருவான்மியூரில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரது வீட்டில் நடந்ததற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. பையனைக் கட்டிக் கொடுத்து 7 வருஷமாச்சு. எப்போதாவது அவர்கள் வருவாங்க, எப்போதாவது நாங்க போவோம், அவ்வளவுதான். என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. டிவியில் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.


இதுதொடர்பாக எனது மகனிடம் பேசவில்லை. அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏத்துப்பேன், அதில் தலையிட மாட்டேன் என்று கூறியுள்ளார் இ. கருணாநிதி.


மருமகள் மெர்லினா கண்ணீர் விளக்கம்


இதற்கிடையே, இந்த விவகாரத்தில் புகாருக்குள்ளாகியுள்ள இ. கருணாநிதியின் மருமகள் மெர்லினா கண்ணீர் மல்க ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த 3 நாட்களாக நாங்கள் சரியாகவே தூங்கவில்லை. ஏன் இப்படி ஒரு புகாரை அந்தப் பெண் கொடுத்தார் என்று தெரியவில்லை. எங்கள் வீட்டுப் பெண்ணாகத்தான் அவரை நடத்தினோம். எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் அவர் சொல்லட்டும். எனது மாமனாரை ஏன் குற்றம் சாட்டுகிறார்... அவரது இத்தனை கால உழைப்பையும் அவர் ஒன்றுமில்லாமல் போகச் செய்வது நியாயமா.. 


அந்தப் பெண்ணுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள். என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நான் உன்னை எப்படி பார்த்துக் கொண்டேன் என்றும் தெரியும். நீயும் என் மீது எவ்வளவு லவ் வைத்திருந்தாய் என்று எனக்கும் தெரியும்.  அப்படி இருக்கையில் ஏன் இப்படி ஒரு புகார் கொடுத்தாய் என்று புரியவில்லை என்று அழுதபடி கூறியுள்ளார் மெர்லினா.