விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தத் தயாராகும் தவெக.. போலீஸ் கேட்ட 21 கேள்விகள்.. அனுமதி கிடைக்குமா?

Aadmika
Sep 02, 2024,07:54 PM IST

விக்கிரவாண்டி :   நடிகர் விஜய் துவங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் 21 கேள்விகளை கேட்டுள்ளனர். 


நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கி, அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டு, அது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடியை ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். அதோடு தனது கட்சியின் தீம் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.




இதைத் தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தி, அங்கிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை துவங்க போவதாக விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாட்டை நடத்துவதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இத தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரின் அலுவலகங்களில் மனு அளிக்கப்படிருந்தது.


மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து மாநாட்டிற்கு விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கான வழி, வாகனங்கள் வந்து செல்லும் வழி, வாகனங்கள் நிறுத்துமிடம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் ஆகியவை தொடர்பாக 21 கேள்விகள் எழுப்பி, விக்கிரவாண்டி போலீசார் சார்பில் விஜய் கட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


போலீசார் எழுப்பிய 21 கேள்விகளுக்கும் பதிலளிக்க விஜய் கட்சிக்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் அனைத்திற்கும் விஜய் கட்சி சார்பில் முறையாக பதில் அளிக்கப்பட்டால் மட்டுமே விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டிற்கு போலீசாரின் அனுமதி வழங்கப்படும்.




மாநாட்டிற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்த முழு விபரங்களை சரியாக விஜய் கட்சி அளிப்பதை பொறுத்து தான் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி அளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி முடிவும் செய்வார்கள். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழக அரசியல் களமும் அதிகம் எதிர்பார்க்கும் இந்த மாநாடு எப்படி அமைய போகிறது என்பதை பொறுத்தே விஜய்யின் அரசியல் என்ட்ரியும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களே உள்ளதால் மாநாட்டிற்கான ஏற்பாட்டு வேலைகளும் கட்சி சார்பில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.


கட்சி மாநாட்டிற்கு போலீசார் அனுமதி வழங்கும் வரை திக்...திக்...நிமிடங்களாகவே இருந்து வருகிறது. ஒருவேளை விஜய்யின் கட்சி மாநாட்டிற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்தால் அது வேறு விதமான தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மாநாடு நடத்தும்போது இதுபோன்ற விளக்கங்களை காவல்துறை கேட்பது இயல்புதான் என்பதால் உரிய பதில் கிடைத்ததும், அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி கிடைக்காவிட்டால் கோர்ட்  மூலமாக தவெக நிர்வாகிகள் அனுமதி வாங்கலாம் என்று தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்