பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் கண்ணுல காயம் ஏற்பட்டது எப்படி.. பாஜக தொண்டர் அதிரடி கைது!

Su.tha Arivalagan
Apr 23, 2024,03:58 PM IST

கொல்லம்: கொல்லம் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


நடிகரான கிருஷ்ணகுமார் பாஜகவில் செயல்பட்டு வருகிறார். அவர் கொல்லம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும்  கூட சமீபத்தில் பிரச்சாரம் செய்திருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் முலவன என்ற இடத்தில் பிரச்சாரம் செய்தபோது அவரது கண்ணில் காயம் பட்டது. 




இதையடுத்து போலீஸில் கிருஷ்ணகுமார் புகார் கொடுத்தார். அதில், எதிர்க்கட்சியினரான சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்தான் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு தன்னைத் தாக்கி விட்டதாக கிருஷ்ணகுமார் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து குந்தாரா போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் தற்போது பாஜகவைச் சேர்ந்த சனல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் கிருஷ்ணகுமாரின் கண்ணில் ஏற்பட்ட காயத்துக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சனல் வைத்திருந்த சாவி தெரியாமல் கிருஷ்ணகுமாரின் கண்ணில் பட்டு விட்டது. இதனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. 


இதையடுத்து அவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கைதின் மூலம் கிருஷ்ணகுமாரைத் தாக்கியவர் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்றும் இது தற்செயலாக நடந்த சம்பவமே தவிர தாக்குதல் அல்ல என்றும் தெரிய வந்துள்ளது.