பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க.. அடடே யாரைச் சொல்கிறார் வைரமுத்து!

Meenakshi
May 15, 2024,02:41 PM IST

சென்னை:  பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க, மன்றில் இழித்தாரும் வாழ்க, நானோ காலம் போல் கடந்து செல்வேன் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்ட  வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.


கவிஞர் வைரமுத்து சமீபத்தில் இசை பெரிதா, மொழி பெரிதா என்று பேசப் போக அது பெரும் விவாதமானது. பலரும் எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். இசையமைப்பாளர் கங்கை அமரனோ கடுமையாக எச்சரித்து பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இன்னொரு கவிதை வரிகளைப் போட்டுள்ளார். இதுவும் சூட்டைக் கிளப்பியுள்ளது.


வைரமுத்து போட்டுள்ள புதிய கவிதை:





பழித்தாரும் வாழ்க; என்னைப்

பகைத்தாரும் வாழ்க; மன்றில்

இழித்தாரும் வாழ்க; வாழ்வில்

இல்லாத பொய்மை கூட்டிச்

கழித்தாரும் வாழ்க; என்னைச்

சுற்றிய வெற்றி வாய்ப்பைக்

கழித்தாரும் வாழ்க; நானோ

காலம்போல் கடந்து செல்வேன் 


என்று எழுதியுள்ளார். இந்த வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ் பெற்ற திரைப்பட பாடலாசிரியரான வைரமுத்து, இளையராஜாவின் இசையில் நிழல்கள் படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர். சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல், இலக்கியத்தையும் தொட்டு முத்துக் குளித்தவர் வைரமுத்து. 


இவரது சின்ன சின்ன ஆசை பாடல் வரிகளுக்கு அடிமையானவர் எத்தனையோ பேர். தேனி மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். பல கவிதை தொகுப்புகள், கட்டுரைகள், புதினங்கள் என்று எழுதியுள்ளார். கலைமாமணி விருது, சாகித்ய அகாதமி விருது, பத்ம பூசன், தேசிய விருது என பல விருதுகளை பெற்றவர். 


இளையராஜாவால் அறிமுகமாகி ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் இன்னொரு பரிமாணத்தில் தமிழ் சினிமாவை அளந்தவர் வைரமுத்து. காலம் இளையராஜாவையும், வைரமுத்துவையும் பிரித்துப் போட்டு வேடிக்கை பார்க்கிறது.. இந்த சண்டையில் பலர் குளிர் காய்கிறார்கள்.. பலர் வேதனைப்படுகிறார்கள்.