ரூ. 50,000... ஆர்.எம்.வீ.யை அரை அடி பின் வாங்க வைத்த கவிஞர் வைரமுத்து.. இதான் மேட்டர்!

Su.tha Arivalagan
Sep 21, 2024,06:10 PM IST

சென்னை:   தனது திரையுலக வாழ்க்கையில் நடந்த பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களை அவ்வப்போது கவிதை பாணியில் கொடுத்து வருகிறார் வைரமுத்து. அதில் இப்போது பாட்ஷா பட அனுபவத்தைக் கூறியுள்ளார்.


பாட்ஷா படத்தை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்று வரை இப்படம் மிகப் பெரிய விருப்பப் படமாக இருந்து வருகிறது. அப்போது அந்தப் படம் செய்த மேஜிக், அது ஓடிய விதம், அதற்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் யாராலும் மறக்க முடியாது.


சத்யாமூவிஸ் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், விஜயக்குமார் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.  இந்தப் படத்தின் டெம்ப்ளேட்டை வைத்து பின்னர் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன. இன்றளவும் பாட்ஷா டாப்பில்தான் இருக்கிறது.




பாட்ஷா படம் மிகப் பெரிய வெற்றி அடைய முக்கியக் காரணங்களில் சில - அதன் பாடல்கள், இசை, வசனங்கள் ஆகியவைதான். பாடலாசிரியராக வைரமுத்து அந்தப் படத்தில் அதகளப்படுத்தியிருப்பார். தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு, பாட்ஷா பாரு பாட்ஷா பாரு, வா வா ராமையா என அவரது அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பஹிட் ஆகியிருந்தன.


இந்தப் பாட்ஷா படத்தில் தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் வைரமுத்து. அவரது கவிதை பாணி பதிவு இதோ:


பாட்ஷா படத்திற்குப்

பாட்டெழுத அழைத்தார்கள்


‘உங்களுக்கு எவ்வளவு 

சம்பளம்’ என்றார்

தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்


‘முழுப்படத்துக்கு

50ஆயிரம்’ என்றேன்


அதிர்ச்சியானவர்

நாற்காலியைவிட்டு

அரை அடி பின்வாங்கினார்


‘பாடலாசிரியருக்கு

இவ்வளவு பணமா?

நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு

500 முதல் 1000 வரை தருவதுதான்

வழக்கம்’ என்றார்


‘இப்போது நான்வாங்கும்

ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்;

அப்புறம் உங்கள் முடிவு’

என்றேன்


‘பாடல் எழுதுங்கள்;

பார்க்கலாம்’ என்றார்


எல்லாப் பாடலும் 

எழுதி முடித்தவுடன்

நான் கேட்டதில் 5ஆயிரம்

குறைத்துக்கொண்டு

45ஆயிரம் கொடுத்தார்


நான் பேசாமல்

பெற்றுக்கொண்டேன்


வெளியானது ‘பாட்ஷா’;

வெற்றியும் பெற்றது


படத்தின் வெற்றியில்

பாட்டுக்கும் பங்குண்டு என்று

பேசப்பட்டது


ஒருநாள்

நாகேஸ்வர ராவ் பூங்காவில்

பாட்டெழுதிக்கொண்டிருந்தேன்

அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று 

என்னைக் கண்டு நின்றது


காரிலிருந்து இறங்கி வந்தவர்

‘வீட்டுக்குப் போகும்போது

ஆர்.எம்.வீ ஐயா உங்களை

அலுவலகம் வந்துபோகச்

சொன்னார்’ என்றார்


சென்றேன்


ஆர்.எம்.வீ என் கையில்

ஓர் உறை தந்தார்


‘என்ன இது?’ என்றேன்


‘நாங்கள் குறைத்த பணம்

5000’ என்றார்


‘நன்றி’ என்று

பெற்றுக்கொண்டேன்


தயாரிப்பாளர் குறைத்தாலும்

தமிழ் விடாது என்று 

கருதிக்கொண்டேன்


அந்தப் பணம் 5ஆயிரத்தை

டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா

நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக 

வழங்கினேன்


இன்று அது வெறும் 50, 000 ரூபாய் தானே என்று நமக்குத் தோன்றலாம்.. ஆனால் 50 கோடி கொடுத்தாலும் கூட அது செய்த மேஜிக்கை திரும்ப வைரமுத்துவால் கூட செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்