கேரளா மட்டுமல்ல.. எல்லா மாநிலங்களுக்கும்.. ஹேமா கமிட்டி வேண்டும்.. கவிஞர் வைரமுத்து

Meenakshi
Sep 14, 2024,04:39 PM IST

சென்னை: ஹேமா கமிட்டி எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். திரைத்துறையில் மட்டுமல்லாது நாட்டின் எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வைரமுத்து. 


அப்போது  அவர் பேசுகையில், இந்த ஹேமா கமிட்டி என்பது எல்லா மாநிலங்களிலும் முக்கியமான துறைகளில் அமைக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு. திரைத்துறைகளில் மட்டுமல்ல நாட்டில் எல்லா துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள். பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்றால் பெண்மையில் இருக்கிற மென்மை என்ற ஒரு கருத்தை நீங்கள் நீக்கிவிட வேண்டும்.




ஆணுக்கு ஆண்மை என்று இருப்பதும், பெண்ணுக்கு பெண்மை என பிரிக்கப்படுவதும், நாட்டில் பேதங்களை ஏற்படுத்துகிற மதிப்பீடுகள் என்று கருதுகிறேன். ஆணும் சரி சமம் தான்.பெண்ணும் சரிசமம் தான். இதில் யாரும் யாரையும் துன்புறுத்துவது என்பது பாலினம் ஆனது என்று காட்டுவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. பெண் இனம் பலவீனமான பாலினம் அல்ல. 


இந்திய பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு கோரிக்கை, பெண்களுக்கு கூடுதலாக பாதுகாப்பிற்கான பயிற்சியை கல்வித் திட்டத்தில் சேருங்கள். பெண்களுக்கு விளையாட்டு பயிற்சி மட்டும் போதாது, எழுத்து பயிற்சி மட்டும் போதாது, பெண் குழந்தைகளுக்கு தங்களை தாங்களே காத்துக் கொள்கிற உடல் வலிமையை ஊட்ட செய்ய வேண்டும். அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இது புதிய இந்தியாவை எழுதுவதற்காக தொடக்கமாக இந்த ஹேமா கமிட்டியை நான் பார்க்கின்றேன் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்