விஜய் கணக்கு தப்பாது.. ஷாஜகானை நினைவு கூறி.. விஜய்யை டேக் செய்து வைரமுத்து போட்ட திடீர் போஸ்ட்!

Su.tha Arivalagan
Oct 07, 2024,01:00 PM IST

சென்னை:   எல்லாக் கண்களும் இப்போது நடிகர் விஜய் மீதுதான் பதிந்திருக்கிறது. அவர் செய்யப் போகும் அரசியல் எப்படி இருக்கும்.. அவர் போகும் பாதையில் எப்படியெல்லாம் சவால்கள் வரப் போகிறது.. அதை எப்படியெல்லாம் அவர் தாண்டப் போகிறார்.. என்று பல்வேறு விதமான விவாதங்கள் சூடாகப் போய்க் கொண்டுள்ளன. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து விஜய் கணக்கு தப்பாது என்று கூறி அவரை டேக் செய்து போட்டுள்ள ஒரு போஸ்ட் பலரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.


கவிஞர் வைரமுத்து அவ்வப்போது திரைப்பாடல் அனுபவம் குறித்து பதிவு போடுவது வழக்கம். பாடல்கள் அமைக்கும் போது சந்தித்த சுவாரஸ்ய அனுபவங்களை அவர் அவ்வப்போது போட்டு வருகிறார். அதுவும் தனது பாணியில் கவிதை நடையில்தான் அதை அவர் வெளியிடுவார்.


இதற்கு முன்பு அவர் பல நடிகர்கள் குறித்து பதிவுகள் போட்டுள்ளார். ரஜினியின் சில பாடல்கள் குறித்தும் அவர் போட்டிருந்தார். அவை பெரிதாக பேசப்படவில்லை. ஆனால்,  தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள விஜய் குறித்து அவர் போட்டதால்தான் அந்தப் பதிவு வைரலாகி விட்டது... இதுதான் வைரமுத்து போட்ட பதிவு:




விஜய் நடித்த

ஷாஜகான் படத்துக்கு

எல்லாப் பாடல்களையும்

எழுதி முடித்தேன்


'மெல்லினமே'

'மின்னலைப் பிடித்து'

'அச்சச்சோ புன்னகை'

ஆகிய பாடல்கள்

இசை இலக்கியமாய்

அமைந்தது கண்டு

ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்


ஓர் அதிகாலையில்

ஒருகால் காருக்குள்ளும்

மறுகால் தரையிலும்

இருந்த பரபரப்பில்

அந்தப் படத்தின் இயக்குனர்

ரவி ஓடிவந்தார்


'படத்துக்கு இன்னொரு

பாட்டு வேண்டும்' என்றார்


'எல்லாப் பாட்டும்

முடிந்து விட்டதே;

இனி என்ன பாட்டு' என்றேன்


'எல்லாப் பாட்டும்

நல்ல பாட்டாகவே

இருக்கு கவிஞரே;

ஒரே ஒரு குத்துப்பாட்டு

வேண்டும்' என்றார்


(கூத்துப் பாட்டு என்பதுதான்

மொழிச் சோம்பேறிகளால்

குத்துப் பாட்டு என்றாகிவிட்டது)


தயங்கினேன்


'விஜய் சொல்லி

அனுப்பினார்' என்றார்


கதாநாயகன் சொன்னபிறகு

மறுக்க முடியவில்லை;

எழுதிக் கொடுத்தேன்


அரங்கம் சென்று பார்த்தால்

இலக்கியப் பாடல்களுக்கு

மெளனமாய் இருந்த கொட்டகை

கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது


விஜய் கணக்கு

தப்பவில்லை


இசைஇலக்கியம்

இன்புறுவதற்கு;

கூத்துப் பாட்டு

கொண்டாடுவதற்கு


அந்தப் பாட்டு

எந்தப் பாட்டு தெரியுமா?


'சரக்கு வச்சிருக்கேன்

இறக்கி வச்சிருக்கேன்

கறுத்த கோழி மிளகுபோட்டு

வறுத்து வச்சிருக்கேன்'


அரசியல் கணக்கை சொல்கிறாரா வைரமுத்து?


ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் விஜய் என்ற அர்த்தத்தில்தான் விஜய் கணக்கு தப்பவில்லை என்று வைரமுத்து கூறியிருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது விஜய் அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார். கட்சி தொடங்கியுள்ளார். மாநாட்டை நடத்தப் போகிறார். 2026தான் எனது குறி என்றும் கூறி விட்டார். இதுவரை பார்த்திராத அரசியலை நாம் தரப் போகிறோம் என்றும் கூறியுள்ளார். 


விஜய் கணக்கில் தப்ப மாட்டார் என்பதை சுட்டிக் காட்டி, விஜய்யின் அரசியல் கணக்கும் அப்படித்தான் இருக்கும் என்று வைரமுத்து சொல்லாமல் சொல்ல வருகிறாரா என்று விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்