திருமணம் குறித்த ஆர்வம்.. இளைஞர்களின் மனப்போக்கு.. கவலை அளிப்பதாக.. வைரமுத்து வேதனை!

Manjula Devi
May 22, 2024,05:44 PM IST

சென்னை: இன்றைய இளம் தலைமுறையினர்கள் திருமணம் குறித்து தயக்கம் காட்டுவதும்.. திருமணம் செய்வதற்கு மிகவும் சலித்துக் கொள்வதும், தனக்கு கவலை அளிப்பதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


திருமணம் என்பது இரு மனங்கள் சம்மதத்துடன் இணையும் ஒரு அழகான வாழ்க்கை பயணம்.  வீட்டில் பார்த்து வைத்து நடக்கும் திருமணங்கள், காதல் கல்யாணம் என அவரவர் விருப்படி இந்த இல்லற வாழ்க்கையை மக்கள் தேர்வு செய்கிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் மத்தியில் திருமணம் செயவதிலும் சரி, திருமணம் செய்த பிறகும் சரி ஏகப்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகள் உருவாவது அதிகரித்து வருகின்றன.




எதுக்கெடுத்தாலும் டைவர்ஸ். உட்கார்ந்தால் டைவர்ஸ்.. நின்னா டைவர்ஸ்.. பேசினா டைவர்ஸ்.. இப்படி  எல்லாவற்றிற்கும் குறை குற்றம் கண்டுபிடித்து டைவர்ஸ் வாங்கிக் கொண்டு திருமண பந்தத்தில் இருந்து விலகுவோர் அதிகரித்து வருகின்றனர். குழந்தையின் நிலைமை என்னாகும் என்று பல இளம் பெற்றோர்கள் நினைப்பதில்லை. இது ஒரு பக்கம் இருக்க.. மறுபக்கம் வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருமணம் செய்ய தயக்கம் காட்டுவோரும் பெருகி வருகின்றனர்.


நல்ல வேலை பார்த்த பிறகு கல்யாணம் செய்யலாமே, இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம், கல்யாணம் பண்ணி என்ன ஆகப் போகுது என்ற மனப் போக்கு கொண்டோர் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் வைரமுத்து ஒரு கருத்தை கவிதை வடிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


என் மதிப்புக்குரிய

அமைச்சர் ஒருவரின்

மனைவியிடம் கேட்டேன்


‘பெண் பிள்ளைகளுக்கு

எப்பொழுதம்மா திருமணம்?’


அவர் முகத்தில் - ஒரு 

வாடிய புன்னைகை

ஓடி உடைந்தது


‘சமகாலத்தில்

திருமணமான சகபெண்களின்

வாழ்க்கையைப் 

பார்த்துப் பார்த்துத்

திருமணம் என்றதும்

அஞ்சுகிறார்கள் அண்ணா’

என்றார்


இந்தக் குரலை 

நான் பரவலாகக் கேட்கிறேன்

நிகழ்காலத் தலைமுறையின்

விழுமியச் சிக்கல் இது


ஒன்று

திருமண பந்தத்தின்

ஆதி நிபந்தனைகள்

உடைபட வேண்டும்

அல்லது

திருமணம் என்ற நிறுவனமே

உடைபடுவதை

ஒப்புக்கொள்ள வேண்டும்


ஒரு யுக மாற்றத்திற்குத்

தமிழர்கள் அல்ல அல்ல

மனிதர்கள் தங்கள் மனத்தைத்

தயாரித்துக்கொள்ள வேண்டும்


சமூகம் உடைந்துடைந்து

தனக்கு வசதியான

வடிவம் பெறும் -

கண்டங்களைப்போல  - என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.