"ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது.. கவலையோடு என் கார் நகரும்".. உதயம் குறித்து உருகிய வைரமுத்து!

Meenakshi
Feb 15, 2024,08:37 PM IST

சென்னை: ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது... என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன... என உதயம் திரையங்கு மூடப்படுவதற்கு  வைரமுத்து வருத்தத்துடன் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சென்னையின் அடையாளங்களில் ஒன்று உதயம் தியேட்டர். உதயம் வளாகத்தில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரைகள் இயங்கி வந்தன. கடந்த 41 ஆண்டுகளாக இந்த திரையரங்கம் செயல்பட்டு வந்தது. நடுத்தர குடும்பங்களுக்கே உரிய திரையரங்கு என்றால் அது உதயம் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகி இருந்த ஒரு அரங்கு. குறைந்த விலையில் இங்கு டிக்கெட் விற்கப்பட்டதுடன், இடைவெளிக்கான ஸ்னாக்ஸ்சும் தரமாக குறைந்த விலைக்கு கிடைக்கும் என்பது இதன் சிறப்பு. 


முக்கிய திரை நட்சத்திரங்களின் படங்கள் இங்கு ஏராளமாக வெளியிடப்பட்டு, ரசிகளின் விசில் சத்தமும் அதிகம் இடம் பெற்ற இடம் இது. இன்றைய நவீன கால வளர்ச்சியின் காரணமாக அதிகளவில் இங்கு யாரும் வராததினால் இத் திரையங்கம் மூடப்படுகிறது. இதை ரசிகர்களால் தங்கிக் கொள்ள முடியவில்லை என்று பலர் தங்களின் மனக்குமுறல்களை வெளிபடுத்தி வருகின்ற வேலையில், ஒரு திரைக் கலைஞனும் தாங்கிக் கொள்ள முடியாமல் குமுறி வருகின்றார். அவர் தான் வைரமுத்து. உதயம் திரை வளாகம் மூடப்படுவது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,




ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;

இதயம் கிறீச்சிடுகிறது


முதல் மரியாதை, சிந்து பைரவி,

பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்

ரோஜா என்று

நான் பாட்டெழுதிய

பல வெற்றிப் படங்களை

வெளியிட்ட உதயம் திரைவளாகம்

மூடப்படுவது கண்டு

என் கண்கள்

கலைக் கண்ணீர் வடிக்கின்றன


மாற்றங்களின்

ஆக்டோபஸ் கரங்களுக்கு

எதுவும் தப்ப முடியாது என்று

மூளை முன்மொழிவதை

இதயம் வழிமொழிய மறுக்கிறது


இனி

அந்தக் காலத் தடயத்தைக்

கடக்கும் போதெல்லாம்

வாழ்ந்த வீட்டை விற்றவனின்

பரம்பரைக் கவலையோடு

என் கார் நகரும்


நன்றி உதயம் என்று கூறியுள்ளார்.