நீ என்ன பெரிய டாடா வா.. இனி அப்படி சொல்ல முடியாதே.. வைரமுத்து நெகிழ்ச்சி

Manjula Devi
Oct 10, 2024,11:50 AM IST

சென்னை:   நீ என்ன பெரிய டாடாவா என்று சிறு வயது முதல் புழங்கி வந்த பெயர் இன்று மறைந்து விட்டது என கவிஞர் வைரமுத்து உணர்ச்சி பொங்க வரிகளில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


டாடா குழுமத்தின் தலைவரும் நிறுவனமான ரத்தன் டாடா  உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இரங்கல் செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் ரத்தன் டாடா மறைவிற்கும்  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


அத்துடன் அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் எனவும், இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.




இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதை நடையில் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த வைரமுத்து கவிதை:


பெருந்தொழிலதிபர்

ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு

இந்தியா இரங்குகிறது


'நீ என்ன

பெரிய டாட்டாவா' என்று

சிறு வயது முதல்

புழங்கி வந்த பெயர்

இன்று மறைந்துவிட்டது


ஈட்டிய செல்வத்தில்

சரிபாதிக்கு மேல்

அறக்கட்டளை மூலம்

அறப்பணிகளுக்கு

அள்ளி வழங்கிய

ஒரு கொடையாளனை

தேசம் இழந்துவிட்டது


ஆட்சிகள்

மாறிக்கொண்டிருந்தாலும்

தன் தொழில் நேர்மையை

மாற்றிக்கொள்ளாத ஒரு

மகத்தான மனிதர்


இந்திய மனிதவளத்தைத்

தன் வேலைவாய்ப்புகளால்

செழுமை செய்தவர்


தன் நிறுவனங்களுக்கு

அவர் விட்டுச் சென்றிருக்கும்

தொழில் அறம்

நிலைக்கும் வரைக்கும்

அவர் புகழும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்