2026.. ஆயத்தமாகும் பாமக.. தொகுதி தோறும் மகளிர் அணி.. பல்வேறு சமூகங்களுக்கு வாய்ப்பு தர முடிவு!

Su.tha Arivalagan
Aug 15, 2024,03:30 PM IST

சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை பாமக தொடங்கியுள்ளது. சட்டசபைத் தொகுதி வாரியாக மகளிர் அணி தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பளிக்கவும் முடிவு செய்திருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் அடுத்து 2026 சட்டசபைத் தேர்தலை நோக்கி அனைத்துக் கட்சிகளின் கவனமும் திரும்பியுள்ளது. திமுக ஏற்கனவே ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டது. அதேபோல அதிமுகவிலும் பணிகள் தொடங்கி விட்டதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான பாமகவிலும் தேர்தலை மனதில் கொண்டு முன்னேற்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 




பாட்டாளி மக்கள் கட்சியின் களச் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தலா ஒரு தொகுதி செயலாளர், ஒரு தொகுதி தலைவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டு,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  ஆகியோர்  ஆணைப்படி அமைக்கப்பட்ட  7 குழுக்கள்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்து வருகின்றனர்.


ஒவ்வொரு தொகுதிக்கும் பா.ம.க. செயலாளர், தலைவர் மட்டுமின்றி மகளிர் அணி தலைவர் மற்றும்  செயலாளர்களையும் தேர்ந்தெடுக்க  மருத்துவர் அய்யா அவர்கள் ஆணையிட்டுள்ளார்.  அதன்படி, தொகுதி மகளிர் அணி தலைவர், செயலாளர்  ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களை ஒவ்வொரு தொகுதியிலும் பயணம் மேற்கொள்ளும்  குழுவினர் தேர்வு செய்வார்கள்.


தொகுதி செயலாளர்கள், தலைவர்கள்  நியமனத்திலும்,  மகளிர் அணி செயலாளர்கள், தலைவர்கள் தேர்விலும் பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதையும் தேர்வுக் குழுக்கள் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் கூட்டங்களில், மகளிர் அணி நிர்வாகிகள் பதவியை வகிக்க விரும்புபவர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலில் வலுவான கூட்டணி அமையாமல் போனதால் வெற்றி வாய்ப்பு நழுவிப் போய் விட்டதாக அதிமுக, பாமக, பாஜக தலைவர்களிடையே கருத்து நிலவுகிறது. அந்தக் குறையை வருகிற சட்டசபைத் தேர்தலில் சரி செய்து விட வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது. வரும் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் குதிக்கவுள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டே திமுக முன்கூட்டியே தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. அதே போல தற்போது மற்ற கட்சிகளும் வேலையை ஆரம்பித்துள்ளதால் சட்டசபைத் தேர்தல் சூடு இப்போதே தொடங்கி விட்டது.