விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தே.ஜ.கூ சார்பில் பாமக போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு

Meenakshi
Jun 14, 2024,06:49 PM IST

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக கட்சி போட்டியிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வரும் 21ஆம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவினை  தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கட்சியும், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள்  இன்னும்  அறிவிக்கவில்லை. இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று திண்டிவனத்தில் நடத்தியது.  இந்த நிலையில் விக்கிரவாண்டியில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று  அறிவிக்கப்படுகிறது.


தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்! என்று கூறப்பட்டுள்ளது.