ஒரு சீட் கூடுதலாக தர முன்வந்த பாஜக.. இலைக்கு "நோ".. தாமரைக்கு "வெல்கம்".. பாமக முடிவு?

Su.tha Arivalagan
Mar 14, 2024,07:00 PM IST

சென்னை: அதிமுகவை விட ஒரு சீட் கூடுதலாக தர பாஜக முன்வந்திருப்பதாலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை கட்சியின் நிர்வாகக் கூட்டத்தைக் கூட்டி இதுதொடர்பாக பாமக முடிவெடுக்கவுள்ளதாம்.


கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக என அனைவரும் ஒன்றாக இருந்து கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தனர். ஆனால் இந்த முறை அதிமுக, பாஜக தனித் தனியாக அணியாக மாறியுள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் இதுவரை பெரிய கட்சி எதுவும் சேரவில்லை. மறுபக்கம் பாஜகவில் சிறிய கட்சிகள் பல சேர்ந்துள்ளன. அங்கும் பெரிய கட்சி எதுவும் இதுவரை சேரவில்லை.




இந்த நிலையில் முதல் பெரிய கட்சியாக பாமகவை, பாஜக வளைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமகவுக்கு 8 சீட் வரை தர பாஜக முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிமுக தருவதை விட ஒரு சீட் கூடுதல் என்று சொல்கிறார்கள். அதேசமயம், எதிர்காலத்தில், ராஜ்யசபா சீட் குறித்து பேசிக் கொள்ளலாம் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். பாமகவினர் பெரும்பாலானோர் அதிமுக பக்கம் போகவே ஆசைப்பட்டாலும் கூட, கூட்டிக் கழித்துப் பார்த்தால் பாஜகவுக்கு போவதே சரியாக இருக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருதுகிறாராம்.


இதையடுத்து பாஜக கூட்டணியில் இணையலாம் என்ற முடிவுக்கு பாமக வந்திருப்பதாக கூறப்படுகிறது. நாளை கூட்டணி குறித்த முக்கிய முடிவை பாமக எடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


பாஜக கூட்டணியில் இதுவரை தமாகா, புதிய நீதிக் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஜான் பாண்டியன் கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அப்படியே கொண்டு வந்து பாஜகவில் இணைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.