லோக்சபாவுக்குள் இவ்வளவு எளிதாக குதிக்க முடியுமா?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி!

Meenakshi
Dec 13, 2023,05:47 PM IST

சென்னை: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில்  உள்ளபார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் மிக எளிதாக குதிக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.  குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பணியாற்றக்கூடிய நாடாளுமன்றம் எந்தவித பாதுகாப்புக் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய தன்மையுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


நாடாளுமன்ற  லோக்சபாவுக்குள் 4 பேர் கலர் புகையைத் தூவி நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:




மக்களவையில் இன்று பிற்பகலில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர் வண்ணப்புகை குப்பிகளை வீசியுள்ளனர். சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்துள்ளனர். அவர்களின் அத்துமீறலால் அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது நிம்மதி அளித்தாலும், நாடாளுமன்றத்திற்குள் மிகவும் எளிமையாக நுழைந்து தாக்குதலை நடத்த முடியும் என்பது மிகவும் கவலை அளிக்கிறது.


நாடாளுமன்றத்தில் கடந்த 2001ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் வண்ணப்புகை குப்பிகளுடன் நுழைய முடியும் போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது ? என்பதுதான் முதன்மையான வினா ஆகும். 


புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணை இடப்பட வேண்டும் பாதுகாப்பில் கோட்டை விட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


நாடாளும் மன்றம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் மிக எளிதாக குதிக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.  இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பணியாற்றக்கூடிய நாடாளுமன்றம் எந்தவித பாதுகாப்புக் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டிய அவசியம் அத்தகைய தன்மையுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.