பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
சென்னை: ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சிறு சலசலப்பு இருந்தது. தற்போது அந்த சலசலப்பு சரியாகிவிட்டது என்று பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் நடந்த பாமக கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின் போது இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாஸின் பேரன் ஆவார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே மேடையிலேயே கடும் வாதமும் மூண்டது. அப்போது இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க விரும்பாதவர்கள், யாராக இருந்தாலும் வெளியேறி விடுங்கள் என்று கோபமாக ராமதாஸ் கூறினார்.
இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பனையூரிலிருந்து தான் செயல்படவுள்ளதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. இதன் விளைவாக தைலாபுரம் தோட்டத்திற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வந்து தனது தந்தையைச் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு இருவருமே பாமக கட்சியிலேயே அமைதியாக செயல்பட்டு வந்தனர்.
இதனையடுத்து, கடந்த 10ம் தேதி திடீரென டாக்டர் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிப்போவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அவரது பொறுப்பையும் தானே ஏற்பதாகவும், கட்சியையும் இளைஞர்களையும் தானே வழி நடத்தப் போவதாகவும் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். அத்துடன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஏன் இந்த திடீர் மாற்றம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்குப் பல காரணங்கள் உண்டு. நான் சிறுக சிறுக தெரிவிப்பேன் என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ். அதன்பின்னர் இருவரையும் சமாதானம் செய்ய வீட்டிலும் கட்சியிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ராமதாஸ் என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாமக உட்கட்சி மோதல் தொடர்பாக அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜிகே மணி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சிறு சலசலப்பு இருந்தது. தற்போது அந்த சலசலப்பு சரியாகிவிட்டது. அனைத்து கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரண ஒரு விஷயம் தான்.
மாமல்லபுரத்தில் வரும் மே 11 ம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருமே பங்கேற்பார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருப்பதால் விரைவில் சுமூகம் ஏற்படும். பாமக தனிக் கொள்கைகள் கொண்ட தனித்துவமான கட்சி. ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இருவரும் மாநாட்டில் ஒன்றாக கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.