மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவைக் கைது செய்ய வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் கொந்தளிப்பு

Su.tha Arivalagan
Sep 06, 2024,10:42 AM IST

சென்னை: போன பிறவியில் பாவம் செய்தவர்கள்தான் இந்த பிறவியில் கண் பார்வை இல்லாதவர்களாக, கை கால் இல்லாதவர்களாக பிறக்கிறார்கள் என்று பேசிய மகாவிஷ்ணு என்பவரின் பேச்சுக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பார்வை மாற்றுத் திறனாளியான அரசுப் பள்ளி ஆசிரியரை அவதூறாக, மிரட்டும் வகையில் பேசிய இவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


அவ்வப்போது யாராவது வந்து ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவது சமீப காலமாக தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் மகாவிஷ்ணு என்பவர் தற்போது புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.




சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் இவரை உரையாற்ற அழைத்துள்ளனர். இவர் ஆன்மீக சொற்பொழிவாளர் என்று கூறப்படுகிறது. அங்கு வந்து பேசிய இந்த மகாவிஷ்ணு, சர்ச்சைக்கிடமான கருத்துக்களைப் பேசியுள்ளார். அவரது சொற்பொழிவால் பெரும் சலசலப்பைும், சர்ச்சையும் ஏற்பட்டது. 


குறிப்பாக போன பிறவியில் பாவம் செய்தவர்கள்தான் இந்தப் பிறவியில் கண் பார்வை இல்லாதவர்களாக பிறக்கிறார்கள். நோய்களோடு பிறக்கிறார்கள்.. இறைவன் கருணையானவன் என்றால் எல்லோருமே ஒரே மாதிரியாகத்தானே பிறந்திருக்க வேண்டும். போன பிறவியில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதற்கேற்பத்தான் இப்போது பிறப்பீர்கள் என்று அவர் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சால் கோபமடைந்த தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவர் எழுந்து அவரது பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்து பேசுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார். 


நீங்கள் பேசுவது தவறு, மறு பிறவி பற்றிப் பேசுகிறீர்கள், மூட நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள். பள்ளியில் இப்படியெல்லாம் பேசக் கூடாது. நிறுத்துங்கள் என்று கூறினார். இதைக் கேட்டதும் மகாவிஷ்ணு எழுந்து வந்து அந்த ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்க யாரு, உங்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரியை விட அறிவு அதிகமா, பாவ புண்ணியம் பற்றி இங்கு பேசாமல் வேறு எங்கு பேசுவது என்று பேசிக் கொண்டே போனார். அவருடன் அந்த தமிழ் ஆசிரியர் மட்டுமே தனியாக வாக்குவாதம் செய்து கொண்டார். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மாறாக ஆசிரியர் சங்கரை அமைதிப்படுத்துவே முயன்றனர்.


இந்த பேச்சுக்கும் அவரது சொற்பொழிவுக்கும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பலரும் இவரைக் கண்டித்துப் பேசி வருகிறார்கள். இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


மகாவிஷ்ணுவைக் கைது செய்க - டாக்டர் ராமதாஸ்




பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ், மகாவிஷ்ணுவின் மிரட்டல் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் பேசிய  கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகளை மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது.


அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வழக்கமாக பள்ளிக்கு ஆண்டு விழா நடத்துவதற்கே சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான் செலவிடப்படும். ஆனால், மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கு தாராளமாக செலவிடப்பட்டுள்ளது. தம்மை மகாவிஷ்ணு என்று கூறிக்கொண்ட அந்த நபருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு தைரியத்தைக் கொடுத்தவர்கள் யார்?


அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க நீதிபோதனை வகுப்புகளை நடத்துங்கள் என்று பா.ம.க பல ஆண்டுகளாக  வலியுறுத்தி வருகிறது.  ஆனால், அதை செய்யாத பள்ளிக்கல்வித்துறை  மாணவ, மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நிகழ்ச்சிகள் இனியும் நடப்பதை அனுமதிக்கக்கூடாது.


சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு இந்த  சிக்கலை மூடி மறைத்து விடக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம்:


காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி இதுகுறித்துக் கூறுகையில், அரசுப் பள்ளியில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சி தருகிறது. அரசு எடுத்து வரும், அயராது மேற்கொண்டு வரும் சித்தாந்த போரின் அடிப்படையை அடியோடு தகர்க்கும் செயலாக இது அமைந்துள்ளது.  யார் இவரை பேசக் கூப்பிட்டார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நமது கல்வி முறையின் அடிப்படையைத் தகர்க்க நடந்துள்ள முயற்சி இது. சரியான கேள்வி கேட்ட ஆசிரியரையும் இந்த நபர் அவமானப்படுத்தியுள்ளார். இவர் மீது கடும் நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார் ஜோதிமணி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்