கே. பாலு போட்ட போடு.. ரைட்டு.. துரைமுருகனோட அந்த சிரிப்பு.. அதாங்க ஹைலைட்டே!

Su.tha Arivalagan
Apr 15, 2024,05:55 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கே.பாலு, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த அமைச்சர் துரைமுருகனைப் பார்த்து நேருக்கு நேராக தனக்கு ஆசிர்வாதம் செய்த அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி கூறுவதாக கூறி அசரடித்தார். அவர் வாக்கு கேட்ட விதத்தைப் பார்த்து துரைமுருகன் தனது ஸ்டைலில் சிரித்தபடி கிளம்பிச் சென்றார்.


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிடும் தொகுதிகளில் ஒன்று அரக்கோணம். இங்கு வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். மறுபக்கம் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் துரைமுருகன் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்.


இந்த நிலையில் ராணிப்பேட்டை பகுதியில் அமைச்சர் துரைமுருகன் வந்தபோது அவருக்கு எதிராக கே.பாலு வாக்கு சேகரித்தபடி வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பாலுவைப் பார்த்த துரைமுருகன் காரை ஸ்லோ செய்து நிறுத்தச் சொன்னார்.




துரைமுருகனைப் பார்த்த கே.பாலுவும் குஷியாகி விட்டார். உடனே மைக்கை டக்கென துரைமுருகன் பக்கம் திருப்பி, முருகனுடைய அருள் எனக்குக் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் எனக்கு  அன்பான அருளை, ஆசியை, வெற்றி பெற வேண்டும் என்ற உங்களுடைய வாழ்த்தை அடிபணிந்து ஏற்றுக் கொள்கிறேன். தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றவுடன் அண்ணனை நேரில் வந்து சந்தித்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன் என்று பேச, அதைக் கேட்ட துரைமுருகன், தனது ஸ்டைலில் தலையை ஜாலியாக ஆட்டியபடி சிரித்தபடி கிளம்பிச் சென்றார்.


எதிரும் புதிருமானவர்களைச் சந்தித்தாலும் கூட  அந்த இடத்தை கலகலப்பாக்குவதில் துரைமுருகன் கில்லாடி. அவரையே சிரிக்க வைத்து குஷிப்படுத்தி விட்டார் கே.பாலு.