இது வரலாறு.. 3வது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி... பிரதமர் நரேந்திர மோடி

Su.tha Arivalagan
Jun 04, 2024,07:52 PM IST

டெல்லி: இந்திய வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். மக்கள் வைத்துள்ள இந்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கடைசியாக வந்த தகவல்களின்படி  பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 290 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தியா கூட்டணிக்கு 235 இடங்கள்  கிடைத்துள்ளன. இதனால் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது. இதுவரை தனித்து ஆட்சி அமைத்து வந்த பாஜக இந்த முறை கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.




இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:


3வது முறையாக ஆட்சியமைப்பதற்கு மக்கள் தேசிய ஜனாயகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனையாகும்.


மக்கள் எங்கள் மீது வைத்துள்ள இந்த அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். கடந்த பத்து வருடமாக நாங்கள் செய்த நற்பணிகளை தொடருவோம் என்றும், மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வோம் என்றும் உறுதியாக கூறிக் கொள்கிறேன்.


தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்ட பாஜக தொண்டர்களுக்கு நான் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது அசாதாரண பணிகளை வெறும் வார்த்தைகளில் அடக்கி விட முடியாது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


இதேபோல ஆந்திராவில் தங்களது கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த ஆந்திர மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்கு பாடுபட்ட தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


அதேபோல ஒடிஷாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த அந்த மாநில மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. ஒடிஷா மக்களின் கனவுகளை நிறைவேற்ற பாஜக கடுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.