ஆட்சியமையுங்கள்.. பிரதமர் நரேந்திர மோடிக்கு.. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி அழைப்பு!

Meenakshi
Jun 07, 2024,06:55 PM IST

டெல்லி: ஆட்சி அமைக்க உரிமைக் கோரி இன்று மாலை  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து கடிதம் வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் கூடி இன்று நரேந்திர மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை சந்தித்தது..




நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மாலை ராஷ்டிரபதி பவன் விரைந்தனர். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திந்தனர். அப்போது உரிமை கோரி பிரதமர் மோடி கடிதம் அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி பதவியேற்பு விழா 9ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறவுள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. இந்த முறை கூட்டணி ஆட்சியாக அது மலருகிறது.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியானது. இதில்  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, பாஜக மூத்த தலைவரும், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பாரத ரத்னா விருது பெற்றவருமான எல்.கே.அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றார் பிரதமர் மோடி. அதேபோல,  முரளி மனோகர் ஜோதியையும் சந்தித்து ஆசி பெற்றார் மோடி. 3 முறையாக பதவி ஏற்க உள்ளார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.