இந்தியாவின் நீளமான கேபிள் பாலம்.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளும் திறப்பு

Su.tha Arivalagan
Feb 25, 2024,05:33 PM IST

அகமதாபாத்: இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலத்தை குஜராத் மாநிலம் துவாரகாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இன்று 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்றே திறந்து வைக்கிறார்.


சுதர்சன் சேது என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலமானது குஜராத் மாநிலத்தின் ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவுகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  ரூ. 970 கோடி செலவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டது. தற்போது அதை அவர் திறந்து வைத்துள்ளார். 2.3 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த கேபிள் பாலம் அமைந்துள்ளது.




பழைய மற்றும் புதிய துவாரகாவுக்கு இடையிலான பாலமாக இது அமைந்துள்ளது. நான்கு வழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் அகலம் 27.20 மீட்டர் ஆகும். இரு பக்கமும் 2.5 மீட்டர் அகலத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இரு பக்க நடைபாதை சுவர்களிலும் பகவத் கீதை வசனங்கள், கிருஷ்ணரின் படங்கள் இடம் பெற்றுள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது. 


இதற்கு முன்பு இங்கிருந்த பாலத்திற்கு சிக்னேச்சர் பாலம் என்று பெயர் இருந்தது. தற்போது அதைத்தான் சுதர்சன் பாலமாக மாற்றியுள்ளனர்.  துவாரகா நகரில் மிகவும் பழமையான துவாரகதீஷ் கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பு இந்தக் கோவிலுக்கு வந்து பிரதமர் மோடி வருகை தந்து வழிபட்டார். அதன் பின்னரே பாலத்தை அவர் திறந்து வைத்தார்.


5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறப்பு





பிற்பகலில் நடைபெறும் விழாவில் ராஜ்கோட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.  இதுதான் குஜராத் மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும்.


இதுதவிர ஆந்திரா (மங்களகிரி), பஞ்சாப் (பதின்டா), உத்தரப் பிரதேசம் (ரேபரேலி), மேற்கு வங்காள மாநிலம் (கல்யாணி) ஆகியவற்றிலும் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஐந்து மருத்துவமனைகளும் மொத்தம் ரூ. 6300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.