நிலச்சரிவால் சீர்குலைந்த வயநாடு.. ஆகஸ்ட் 10ம் தேதி நேரில் பார்வையிட்டு பிரதமர் மோடி ஆய்வு?

Su.tha Arivalagan
Aug 07, 2024,06:28 PM IST

டெல்லி: நிலச்சரிவில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ள கேரள மாநிலம் வயநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10ம் தேதி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இதுவரை 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் புதைந்து போய் விட்டன. இன்னும் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 




கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து நிதியுதவிகளும் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். கேரள மாநில ஆளுநரும் வந்து பார்வையிட்டார். மலையாள நடிகர் மோகன்லாலும் நேரில் வந்து பார்த்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி எப்போது வருவார் என்ற கேள்வி இருந்து வந்தது. 


இந்த பின்னணியில் தற்போது பிரதமர் மோடி வயநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற 10ம் தேதி சனிக்கிழமை பிரதமர் மோடி கண்ணூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு செல்வார். மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவார்.  மேலும் நிவாரண முகாம்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளார். இவையெல்லாம் ஊகச் செய்திகளாகவே உள்ளன. அதிகாரப்பூர்வமாக இந்த பயணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பிரதமர் அலுவலகம் இந்த பயணத் திட்டத்தை உறுதி செய்து அதிகாரப்பூர்வாக வெளியிடும் என்று கூறப்படுகிறது.