ரஷ்யாவைத் தொடர்ந்து.. உக்ரைனுக்கு செல்லும் பிரதமர் மோடி.. போர் தொடங்கிய பின் முதல் விசிட்!

Su.tha Arivalagan
Jul 27, 2024,08:21 AM IST

டெல்லி:  பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் அடுத்து உக்ரைனுக்கு செல்லவிருக்கிறார்.


3வது முறையாக பிரதமராகியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் சென்றிருந்தார். ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் அவர் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதிபர் விலாடிமிர் புடினைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்டவை குறித்து விவாதித்தார். பல்வேறு ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்டன.




உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை இந்தியா ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வந்துள்ளது. போரினால் எந்த பயனும் ஏற்பாடுத என்று போர் வெடித்த சமயத்திலேயே ரஷ்யாவுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது இந்தியா. இருப்பினும் இன்று வரை போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டுதான் உள்ளது.


இந்த நிலையில் ரஷ்ய பயணத்தைத் தொடர்ந்து தற்போது உக்ரைனுக்குச் செல்லவுள்ளார் பிரதமர் மோடி. மோடி, ரஷ்யாவுக்குச் சென்றபோது அதை விமர்சித்திருந்தது உக்ரைன். இந்த பின்னணியில் தற்போது மோடி, உக்ரைன் செல்லவுள்ளது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய தலைவர்களையும், உக்ரைன் தலைவர்களையும் பிரதமர் மோடி அடுத்தடுத்து சந்திக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதன் பிறகு இப்போது முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளார் பிரதமர் மோடி. முன்னதாக  இத்தாலி ஜி 7 மாநாட்டின்போதும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசியிருந்தார் பிரதமர் மோடி என்பது நினைவிருக்கலாம்.