2 நாள் பயணமாக.. இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. பல்லடத்தில் பிரமாண்டக் கூட்டம்!

Su.tha Arivalagan
Feb 27, 2024,12:30 PM IST

கோயம்புத்தூர்: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். இன்று பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் பிரதமர் மோடி, நாளை, திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசுவார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த நடைப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரமாண்ட நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.


பல்லடத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்




இதற்காக இன்று பிற்பகல் இரண்டரை மணி அளவில் பிரதமர் மோடி கோவைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வருகிறார். பல்லடத்திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு ரோட்ஷோ  மூலம் பிரதமர் மோடி செல்கிறார். அவருடன் அண்ணாமலையும் வாகனத்தில் பயணிப்பார். பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூருக்குச் சென்றதும் கூட்டம் தொடங்கும். லட்சத்திற்கும் மேற்பட்டோரை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மதுரையில் ஒரு கூட்டம்


பொதுக்கூட்டம் முடிவடைந்ததும், பிரதமர் மோடி மாலையில் மதுரைக்குச் செல்கிறார். மதுரையில் நடைபெறும் தனியார் பள்ளி விழாவில் பங்கேற்கிறார். இரவு மதுரையில் தங்கி ஓய்வெடுப்பார். நாளை காலை தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் செல்லும் பிரதமர் அங்கு துறைமுகத்தில் நடைபெறும் திட்டத் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். 


திருநெல்வேலியில் நாளை பொதுக்கூட்டம்




தூத்துக்குடி விழாவை முடித்த பின்னர் நெல்லைக்குச் செல்கிறார். அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் அவர் மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்வார்.


பிரதமர் வருகையையொட்டி கோவை, திருப்பூர், பல்லடம், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வரும் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.