பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. 2 நாள் பயணமாக..   நாளை தமிழகம் வருகிறார்.. பிரதமர் நரேந்திர மோடி!

Manjula Devi
Apr 08, 2024,05:36 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாளை தமிழ்நாட்டுக்கு வருகிறார். 2 நாட்கள் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.


நாளை மற்றும் நாளை மறுதினம் சுற்றுப்பயணம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை, நீலகிரி, மற்றும் வேலூரில் நடைபெறும் கூட்டங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.


கேரள மாநிலம் பாலக்காட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாளை மாலை 6:30 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. சென்னையில்  தியாகராய நகர், பாண்டி பஜார் முதல் தேனாம்பேட்டை  வரையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் பங்கேற்க உள்ளார். அப்போது திறந்த வேனில் பயணித்தபடி, பொதுமக்களிடம் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தாமரைச் சின்னத்தில்  வாக்கு சேகரிக்க இருக்கிறார்.


சென்னையில் பிரச்சாரம்:




தென் சென்னை  தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பால் கனகராஜ், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வினோஜ் பி  செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அன்று இரவு கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார். 


வேலூர் பிரச்சாரம்:


மறுநாள் புதன்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 10:30 மணிக்கு வேலூருக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் பாஜக வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவளித்து பேசுகிறார்.  அருகாமை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.


நீலகிரி பிரச்சாரம்:


இதனைத் தொடர்ந்து வேலூரில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1:45 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க இருக்கிறார்.  மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அன்று மாலை 6 மணிக்கு மகாராஷ்டிரா செல்கிறார் பிரதமர் மோடி.


போலீஸ் பாதுகாப்பு:


தமிழகத்திற்கு நாளை மற்றும் நாளை மறுதினம் பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னையில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதமர் செல்லும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், வரும் நாட்களில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங்,  உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் தமிழகத்திற்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று திருச்சியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ரோடுஷோ நடத்தினார். அரியலூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த கூட்டத்திலும் அவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.