நிலச்சரிவில் சிக்கி சீர்குலைந்த.. வயநாட்டை பார்வையிட.. பிரதமர் மோடி நாளை கேரளா வருகிறார்!

Meenakshi
Aug 09, 2024,05:56 PM IST

டெல்லி:   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளா வரவுள்ளார்.


கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்கள்  உருக்குலைந்து போனது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐக் கடந்து சென்றுள்ளது. மேலும் பலரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. 




நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் 14 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த உடல்கள் மற்றும் உடல் உறுப்பு பாகங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அடையாளம் காண முடியாத உடல்கள் ஒருபுறம் அடக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், நடிகர் மோகன்லால், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.


இந்நிலையில், பிரதமர் மோடி நாளை வயநாடு செல்கிறார். சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்திக்க உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடன் இருப்பார்கள் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.