மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில்.. நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி!
டெல்லி: உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நாளை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார் பிரதமர் மோடி.
மகா கும்பமேளா 2025 கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இதுவரைக்கும் 35 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வருகின்றனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள் என 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கும்பமேளாவில் சமீபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இம்மகா கும்பமேளாவில் ரெமோ டிசோசா, அனுபம் கெர், ஷங்கர் மகாதேவன், கிறிஸ் மார்ட்டின், கெளதம் அதானி, சுனில் குரோவர், மம்தா குல்கர்னி உள்ளிட்ட பிரபலங்கள் இது வரையிலும் இந்த புனித நீராடியுள்ளனர். மேலும்,தொழிலதிபர்கள், வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பூட்டான் அரசர் இன்று புனித நீராடினார். அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புனித நீராடினார். இந்த தகவலை யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து உத்திரபிரதேசம் பிரயாக்ராஜ் நகருக்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.
இதையடுத்து திரிவேணி சங்கமம் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை டெல்லி சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் தற்போது நாளை புனித நீராடும் கடமையைச் செயயவுள்ளார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்