சென்னையில்.. பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ.. தியாகராய நகரில்.. ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பு!

Manjula Devi
Apr 09, 2024,11:47 AM IST

சென்னை: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.


7வது முறையாக தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் பிரதமர் மோடி. சென்னை, நீலகிரி, வேலூர், ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. முதற்கட்டமாக சென்னை தியாகராய நகரில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் இன்று மாலை பங்கேற்க உள்ளார். 


பின்னர் வாகன பேரணியை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோவில் பிரதமரின் பாதுகாப்பு கருதி பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை அறிவித்துள்ளது.


அதன்படி, ரோடு ஷோ நடத்தும் போது, பட்டாசு வெடிக்க கூடாது. .அலங்கார வளைவுகளை அமைக்கக் கூடாது.. மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் முழக்கங்களை எழுப்பக்கூடாது.. போன்ற நிபந்தனைகளை காவல்துறை அறிவித்துள்ளது.



போக்குவரத்து மாற்றம்:


பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை தியாகராயநகர் பகுதிகளில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் பிரதமர் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி சாலை முதல் அண்ணா சாலை, ஓ.எம்.சி.ஏ வரையிலும், நந்தனம் முதல் தியாகராய நகர் வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்திற்கு நெரிசல் மிகுந்த பகுதிகளாக அறிக்கப்பட்டுள்ளது. 


இதனால் ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிப்பெட் சாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை தியாகராய நகர் சாலை ஆகிய பகுதி சாலைகளில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இது தவிர தியாகராய நகர், வி.என் சாலை, ஜி.என் செட்டி சாலை, வடக்கு போக் சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் தடை  விதித்துள்ளது.


நாளை வேலூர், நீலகிரி பயணம்:


இன்று சென்னையில் நடைபெறும் வாகன பேரணியை முடித்துவிட்டு, நாளை பிரதமர் நரேந்திர மோடி வேலூர் மற்றும் நீலகிரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். அப்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.