அயோத்தி ராமர் கோவில் திறப்பு.. 11 நாள் விரதம், சடங்குகளைக் கடைப்பிடிக்க.. பிரதமர் மோடி முடிவு

Su.tha Arivalagan
Jan 12, 2024,06:03 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் விரதம் உள்ளிட்ட சடங்குகளைக் கடைப்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமர் இந்த சடங்குகளைக் கடைப்பிடிக்கவுள்ளாராம்.


இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி போட்டுள்ள டிவீட்டில்  அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்த அற்புதமான நிகழ்வைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனது அதிர்ஷ்டமாகும். இந்திய மக்களின் சார்பாக, அவர்களது பிரதிநிதியாக பங்கேற்க கடவுள் எனக்கு உத்தரவிட்டுள்ளார்.


அதை மனதில் கொண்டு 11 நாட்களுக்கு நான் விரதம் உள்ளிட்ட சடங்குகளைக் கடைப்பிடிக்கவுள்ளேன். அனைவரின் ஆசிர்வாதங்களையும் நான் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.




இந்து சாஸ்திரங்களின்படி, பிரதமர் தெரிவித்துள்ள 11 நாள் சடங்குகள் என்பது சாதாரணமானதல்ல. சற்று  கடினமானவையாம். தனது பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும் இதை கடைப்பிடிக்க பிரதமர் முடிவெடுத்துள்ளாராம்.  இந்த காலகட்டத்தில் உணவுக் கட்டுப்பாட்டை பிரதமர் பின்பற்றவுள்ளார். அதாவது விரதம் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 22ம் தேதி விழாவுக்கு பிரதமர்தான் தலைமை வகிக்கவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. உள்ளூரிலும், நாடு முழுவதிலும், சர்வதேச அளவிலும் பலருக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேத மந்திர பாராயணம் ஜனவரி 16ம் தேதி தொடங்கும். ஜனவரி 22ம் தேதி, மிக முக்கியமான சிலை பிரதிஷ்டையை வாரணாசியைச் சேர்ந்த லட்சுமி காந்த் தீக்சித் என்ற புரோஹிதர் நடத்தவுள்ளார்.