என் இனிய இந்திய மக்களே.. தேர்தல் தேதி அறிவிப்பு நாளில் கடிதம் மூலம் கருத்து கேட்கும் பிரதமர்

Aadmika
Mar 16, 2024,05:51 PM IST

டில்லி : லோக்சபா தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் வாட்ஸ்ஆப் வழியாக பிரதமர் மோடி கடிதம் ஒன்றை இன்று காலை அனுப்பி உள்ளார். இதில் தங்களின் ஆட்சி குறித்து நாட்டு மக்களிடம் கருத்து தெரிவிக்கும்படி கேட்டு வருகிறார்.


லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் 400 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்காக உள்ளது. இதற்காக 2047 ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற உள்ளதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக கடந்த ஆண்டு விக்ஷித் பாரத் 2047 (வளர்ந்த இந்தியா) என்ற பயணத்தையும் பிரதமர் நடத்தினார். 




இந்நிலையில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த நாளில் "டியர் ஃபேமிலி" என குறிப்பிட்டு கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகள்ஆகியவற்றை பட்டியல் இட்டு, அது குறித்து மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, 370 சட்டத்திருத்தத்தை ரத்த செய்தது, முத்தலாக்கிற்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை பிரதமர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 16ம் தேதி இன்று காலையிலேயே இந்திய மக்கள் அனைவரின் மொபைல்களுக்கும் பிரதமர் நேரடியாக கருத்து கேட்டும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 


அது மட்டுமல்ல வளர்ந்த இந்தியா என்ற தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற வேறு என்னவெல்லாம் திட்டங்கள், மாற்றங்களை கொண்டு வரலாம் என தங்களின் ஆட்சிக்கு பரிந்துரைகளை அளிக்குமாறும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். என் பாசத்திற்குரிய குடும்ப உறுப்பினர்களே என குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி உள்ள இந்த கடிதம் பற்றி தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. விக்ஷித் பாரத் சம்பர்க் என்ற மத்திய அரசின் குரூப் மூலமாக இந்த வாட்ஸ்ஆப் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.




கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களை பாஜக அரசின் பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் தங்களின் அரசு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.