மக்கள் இயக்கங்களை உருவாக்கிய "மன் கி பாத்".. பிரதமர் மோடி பெருமிதம்

Su.tha Arivalagan
Apr 30, 2023,12:05 PM IST
டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சி பல மக்கள் இயக்கங்களை உருவாக்க காரணமாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் மன் கி பாத் (மனதின் குரல்) என்ற சொற்பொழிவை நிகழ்த்தி வருகிறார். இந்த சொற்பொழிவின் 100வது பகுதி இன்று ஒலிபரப்பானது.

பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு தளங்களிலும் ஒலிபரப்ப விரிவான ஏற்பாடுகளை பாஜக செய்திருந்தது. அனைத்து மாநில பாஜக அலுவலகங்கள், ஆளுநர் மாளிகைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதுதொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதேபோல, மத்திய சுற்றுலாத்துறையும் நாடு முழுவதும் உள்ள  இளைஞர் சுற்றுலா கிளப்களில் 100வது மன் கி பாத் பகுதியை ஒலிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.




முன்னதாக பிரதமர் மோடி ஆற்றிய 100வது சொற்பொழிவின்போது கூறுகையில்,  மன் கி பாத் நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்களை சென்றடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த 100வது பகுதி மட்டும் விசேஷமானது அல்ல. என்னைப் பொறுத்தவரை 100 பகுதிகளுமே விசேஷமானதுதான்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடின்போது செல்பி வித் டாட்டர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிடம் நான் பேசினேன். அந்த ஐடியாவைக் கொடுத்தவரிடமும் நான் பேசினேன். அது மறக்க முடியாதது. 

சுவச் பாரத், காதி, ஆஸாத் கா அம்ரித் மகோத்சவ் ஆகியவை மன் கி பாத் மூலமாக மக்கள் இயக்கங்களாக மாறின என்று கூறினார் பிரதமர் மோடி.

ஐ.நா சபையில் மன் கி பாத்

இதற்கிடையே, 100வது மன் கி பாத் உரையை, ஐ.நா தலைமை அலுவலகத்திலும் ஒலிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

மன் கி பாத் முதல் எபிசோட் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஒலிபரப்பானது. அன்று முதல் ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைதோறும் மன் கி பாத் உரை ஒலிபரப்பாகி வருகிறது.