வாஞ்சையோடு நினைவு கூர்கிறேன்.. டிவீட் போட்டு.. கருணாநிதியைப் புகழ்ந்த பிரதமர் மோடி!

Manjula Devi
Jun 03, 2024,04:35 PM IST

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் கூறி அவரை தான் மதிப்பதாகவும், அவர் மிகவும் மரியாதைக்குரியவர் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.




டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி அறிக்கை விடுத்திருந்தனர். 


இந்த நிலையில் மறைந்த கருணாநிதிக்கு பிரதமர் நரேந்திர மோடியும் தமிழில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவு:


கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார். தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தத்தமது மாநிலங்களில் நாங்கள் இருவரும் முதல்வர்களாக இருந்தது உள்ளிட்ட, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடனான  என்னுடைய பரிமாற்றங்களை நான் வாஞ்சையோடு நினைவுகூர்கிறேன் என பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.


கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரது கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று பிரதமர் மோடி அவரை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். அப்போதைய ஆளுநர் புரோஹித், மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது பதிவைப் போட்டுள்ளார் பிரதமர் மோடி.