உக்ரைன் வந்து சேர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. நமஸ்தே சொல்லி வரவேற்ற உக்ரைன் தலைவர்கள்!

Su.tha Arivalagan
Aug 23, 2024,05:06 PM IST

கீவ்:   பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நாட்டுக்கு வந்துள்ளார். உக்ரைன் நாட்டுக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கு உக்ரைன் தலைவர்கள் நமஸ்தே என்று சொல்லி கும்பிட்டு வரவேற்பு கொடுத்தனர்.


சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்தது உக்ரைன். 1991ம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடானது. அதன் பிறகு அந்த நாட்டுக்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் பிரதமரும் சென்றதில்லை. ரஷ்யா வரை மட்டுமே இந்தியத் தலைவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் முதல் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். 




முன்னதாக போலந்து சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ரயில் மூலம் 10 மணி நேரம் பயணித்து, கீவ் நகருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவருக்கு உக்ரைன் தலைவர்கள் நமஸ்தே என்று சொல்லி கும்பிட்டு இந்திய முறைப்படி வணக்கம் வைத்து வரவேற்றனர்.


சமீபத்தில்தான் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. தற்போது உக்ரைனுக்கு வந்துள்ளார்.  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக முக்கியமாக இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியா இரு நாடுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நடுநிலை வகிக்கிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்