சர்தார்  வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்... பிரதமர் மோடி மரியாதை

Meenakshi
Oct 31, 2023,12:26 PM IST

அகமதாபாத்: இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


குஜராத் மாநிலத்தில் 1875ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்தவர் சர்தார்  வல்லபாய் பட்டேல். அவர் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் முக்கியமானவர் படேல். வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தியவர். 


சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்.  இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கிய பங்காற்றியவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற சிறப்புக்குரியவர்.




ஒற்றுமையை வலியுறுத்தும் பொருட்டு உலகிலேயே மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், குஜராத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். 


படேல் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், தொலைநோக்குப் பார்வை மற்றும் நமது தேசத்தின் தலைவிதியை அவர் வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாங்கள் நினைவுகூருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்திஆகியோர் மலர் தூவி மாரியதை செலுத்தினர்.