"ஜம்மென்று" உருவான ஜம்மு எய்ம்ஸ்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. ஏக்கத்தில் மதுரை!

Meenakshi
Feb 20, 2024,11:55 AM IST

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையினை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


227 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனையில் வளாகத்தில் மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தங்கும் விடுதி, வணிக வளாகம், கலை அரங்கம், செவிலியர் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  720 படுகைகளுடன் கூடிய  வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.




ஜம்மு காஷ்மீரில்  கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம்., மின்சார ரயில் சேவை  உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகளையும் திறந்து வைக்கிறார். 


இந்நிகழ்ச்சி நடைபெறுவது இந்தியா பாகிஸ்தான் எல்லை மாநிலம் என்பதால் பாதுகாப்பு  தீவிரபடுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் ஜம்மு மவுலானா ஆசாத் மைதானம் காவல் துறையின் கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. ராஜ்கோட் , மங்களகிரி பதிண்டா, கல்யாணி மற்றும் ரேபரேலி ஆகிய ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.


மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பல வருடங்களாகி விட்டது. இன்னும் மருத்துவமனை கட்டடம் உருவாகாமலேயே உள்ளது. இதை வைத்தே எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவும் வசதியாகப் போய் விட்டது.. அங்கும் எப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடம் உருவாகும் என்ற ஏக்கத்தில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.