தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான்.. பிரதமர் நரேந்திர மோடி

Su.tha Arivalagan
Feb 27, 2024,05:06 PM IST

பல்லடம்: தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான். அவருக்குப் பிறகு அம்மா ஜெயலலிதாதான் சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். திமுக ஆட்சி என்பது குடும்பக் கட்சி ஆட்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


பல்லடம் பாஜக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்புரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து:




2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் விவாதிக்கப்பட்ட கட்சியாக பாஜக இருக்கிறது. இந்த நாட்டில் அதிகம் விவாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அரசியல் அரங்கில் புதிய சக்தியாக தமிழ்நாடு உருவெடுக்கவுள்ளது. 2024ம் ஆண்டு தமிழ்நாடு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது. என் மண் என் மக்கள் யாத்திரை இன்று மிகப் பெரிய அளவில் நடந்து முடிந்துள்ளது.


தமிழ்நாட்டில் பாஜக அதிகாரத்தில் இல்லை. ஆனாலும் பாஜகவின் இதயத்தில் எப்போதும் தமிழ்நாடு இருந்து கொண்டே இருக்கிறது. அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளும் இதை உணர்ந்துள்ளனர், புரிந்துள்ளனர். அதுகுறித்த விழிப்புணர்வுடன் அவர்கள் உள்ளனர். இந்த மாநிலத்தை பல காலமாக ஊழல்களாால் கொள்ளையடித்தவர்கள் இதனால்தான் பாஜகவைப் பார்த்துப் பயப்படுகின்றனர். பாஜக வளர்வதைப் பார்த்துப் பயப்படுகின்றனர்.  பாஜக அதிகாரத்தை வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.


டெல்லியில் ஏசி ரூம்களில் அமர்ந்து கொண்டு, பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருப்போர், கனவு கண்டு கொண்டிருப்போர் இங்கு வர வேண்டும். இங்கு வந்து தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னணியில் உள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும்.


பாஜகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவு என்பது அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, மாறாக இதயத்திலிருந்து உருவானது. இந்த உறவானது பல காலமாக தொடர்ந்து வருகிறது. தமிழ்நாடு என் மீது நிபந்தனை இல்லாத அன்பைப் பொழிந்துள்ளது.


கொங்கு  மண்டலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில், இந்தியாவின் வளர்ச்சியில் பல வகையிலும் பங்காற்றியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளித்துறை, தொழில்துறை மையமாக கொங்கு மண்டலம் விளங்குகிறது. நமது நாட்டின் காற்றாலை மின்சார உற்பத்தியிலும் கொங்கு மண்டலம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.  சிறுதொழில்துறையிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது முக்கியப் பங்காற்றுகிறது.


தமிழ்நாட்டில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சிறப்பான ஆட்சியைக் கொடுத்துள்ளனர். இலங்கைக்கு நான் போனபோது அவர் பிறந்த கண்டி நாகருக்கு நான் சென்று வந்தேன். மக்களுக்கான ஆட்சியைக் கொடுத்தவர் எம்ஜிஆர். அவரை மக்கள் போற்றி மகிழ்கின்றனர்.  எம்ஜிஆருக்குப் பிறகு சிறந்த ஆட்சியைக் கொடுத்தவர் அம்மா என்று  போற்றப்படும் ஜெயலலிதாதான் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.


பிரதமர் மோடி பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.


அண்ணாமலை விமர்சனத்துக்கு பிரதமர் மோடி விளக்கமா?


சில மாதங்களுக்கு முன்பு அதிமுக நிறுவனர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக் கருத்துக்களைக் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்தான் பாஜகவை கூட்டணியிலிருந்து அதிமுகவும் நீக்கியது. அதன் பிறகு இரு கட்சிகளும் மீண்டும் சேர முடியாமல் இழுபறியாக உள்ளது.


இந்த நிலையில் மறைந்த இந்த இரு தலைவர்களும் சிறந்த ஆட்சிக் கொடுத்தார்கள் என்று பிரதமர் மோடி புகழ்ந்து பேசியிருப்பது அதிமுகவினரை கூல்படுத்த பேசிய பேச்சாக பார்க்கப்படுகிறது. இதையே காரணமாக வைத்து அதிமுகவை கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வர பாஜக திட்டமிடுகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.