உணர்வுப் பூர்வமாக நிற்கிறேன்.. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களிடையே.. நெகிழ்ந்த பிரதமர் மோடி!

Manjula Devi
Jun 07, 2024,06:54 PM IST

டெல்லி:  இன்று எனக்கு உணர்வுப்பூர்வமான நாள் என்று 3வது முறையாக பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி கூறியுள்ளார்.


டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 9ம் தேதி மாலை மீண்டும் பிரதமராக நரேந்திரத மோடி பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.


இன்றைய கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு, நாயுடு, நிதீஷ் குமார், டிடிவி தினகரன், ஓபிஎஸ், அன்புமணி, ஜி கே வாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களும் கலந்து கொண்டனர். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழி மொழிந்தார். 




அதன் பின்னர் ஒவ்வொரு கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் பின்னர் அனைத்து எம்பிக்களும் ஒரு மனதாக பிரதமர் நரேந்திர மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து எம்பிக்களிடையே பேசினார் நரேந்திர மோடி.


அப்போது அவர் கூறுகையில், இது உணர்வுப்பூர்வமான நாள். தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை. தேசமே முதன்மையானது. என் டி ஏ என்றால் சிறந்த நிர்வாகம் என்று பொருள். அரசு எப்படி நடக்கிறது.. எதனால் நடக்கிறது.. என்பது இப்போதுதான் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. 30 ஆண்டுகளில் தற்போது அமைந்துள்ள என் டி ஏ கூட்டணி தான் வலிமையானது.


வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பால் தக்கரே ஆகியோர் என் டி ஏ கூட்டணிக்கு வித்திட்டவர்கள். தேர்தலுக்கு முன்பே உருவான கூட்டணி வெற்றிகரமாக ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சமமானவையே. அரசை வழி நடத்துவதற்கு ஒருமித்த கருத்துகள் தான் அவசியம். பெரும்பான்மை அல்ல. 


தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்க விட்டாலும் பாஜகவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சரியான பாதையில் செல்வதை தமிழகத்தில் கிடைத்துள்ள வாக்குகள் காட்டுகிறது. வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவணங்குகிறேன். 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக  கூட்டணியின் நாடாளுமன்ற  தலைவராக தன்னை ஒரு மனதாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்றார் அவர்.