தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி.. "நம்ம திறமையை நினைச்சா.. பெருமையா இருக்கு"!

Su.tha Arivalagan
Nov 25, 2023,05:28 PM IST

பெங்களூரு: முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் பயணித்து அசத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணத்துக்குப் பின்னர் இந்தியாவின் தொழில்நுட்பத் திறமை பெருமை தருவதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானம்தான் தேஜாஸ்.  இந்த விமானத்தில் இன்று பறந்து மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.


இன்று காலை பெங்களூருக்கு வந்த பிரதமர் மோடி, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.  அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் தேஜாஸ் விமானத்தில் அவர் பயணித்தார். 




இதுகுறித்து பிரதமர் மோடி போட்டுள்ள டிவீட்டில், தேஜாஸ் விமானத்தில் வெற்றிகரமாக பறந்தேன். இந்த அனுபவம் மிகச் சிறப்பானதாக இருந்தது.  நமது நாட்டின் சுயாதீனமான தொழில்நுட்பத் திறமைகள் குறித்த எனது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.  மிகுந்த நம்பிக்கையுடனும், பெருமையுடனும் இங்கிருந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


வழக்கமாக தேஜாஸ் போர் விமானமானது ஒரு சீட் மட்டுமே கொண்டதாக இருக்கும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, 2 இருக்கைகள் கொண் விமானத்தில் பயணித்தார். இந்த போர் விமானங்களை விமானப்படை மட்டுமல்லாமல், கடற்படையும் கூட பயன்படுத்துகிறது.


இதுவரை தேஜாஸ் விமானம் அனைத்து வகை சோதனைகளிலும் வெற்றி பெற்ற ஒன்றாகும். எந்த விபத்திலும் இதுவரை தேஜாஸ் சிக்கியதில்லை என்பதும் முக்கியமானது. தற்போது விமானப்படையிடம் 40 தேஜாஸ் எம்கே1 ரக போர் விமானங்கள் உள்ளன.  இதுதவிர தேஜாஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்களை (83 விமானங்கள்) வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன், ரூ. 36,468 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது விமானப்படை.