தமிழில் பேச முடியவில்லையே.. எனக்கு வருத்தமாக உள்ளது.. வேலூர் கூட்டத்தில்.. பிரதமர் மோடி ஆதங்கம்!

Manjula Devi
Apr 10, 2024,05:54 PM IST

வேலூர்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று வேலூர் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழ் உரையாற்ற முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. நாடு முழுவதும் தமிழின் பெருமையை கொண்டு செல்வதே எனது முயற்சி என உணர்ச்சி பொங்க பேசினார்.


7 வது  முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் ரோடு ஷோ  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இன்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் அப்துல்லாபுரம் வந்தடைந்த அவர் அங்கிருந்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம், தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ராமதாஸ், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு, ஆரணி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமார், திருவண்ணாமலை அஸ்வத்தாமன், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 




பிரதமரின் பேச்சிலிருந்து:


மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வகையில் திமுக கருத்துக்களை கூறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்து உள்ளோம். எனக்கு தமிழில் பேச முடியவில்லை என்பது  வருத்தமாக உள்ளது. நாடு முழுவதும் தமிழின் பெருமையை அறிவதே எனது முயற்சி. தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக நான் எனது முழு முயற்சியையும் பயன்படுத்துவேன். நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன். 


குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கத்தை உருவாக்கி இருக்கிறேன். நான் ஐ.நா சபையில் தமிழ் மொழியில் பேச முயற்சி செய்து வருகிறேன். நம்முடைய தமிழ் மொழி உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி. நான்  நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் போது திமுக அதில் கலந்து கொள்ளவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நிகழ்வை புறக்கணித்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் பிரதமர்.


மதியம் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக இணை தலைவர் எல் முருகன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.