வழக்கத்திற்கு மாறாக.. சன்டே அன்னிக்கு அமைச்சரவை கூட்டம்.. புதுஸ்ஸா இருக்கே!

Aadmika
Mar 17, 2024,11:43 AM IST

டில்லி : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையில் அமைச்சரவை கூட்டத்தை  கூட்டி உள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி துவங்கி, ஜூன் 01ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஜூன் 04ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 




வெள்ளிக்கிழமை மாலை வரை இப்படி ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசு அலுவல் அட்டவணையிலேயே கிடையாதாம். திடீரென்று தான் இந்த கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதுவும் எதற்காக இந்த அவசர அமைச்சரவை கூட்டம், இதில் எதைப் பற்றி ஆலோசிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லையாம். ஆனால் பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


ஓமன் நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம், ஈரானின் சபாகர் துறைமுகத்தின் எல்லை வரம்பை விரிவு செய்வது உள்ளிட்ட நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் இதே போல் நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் இந்திய எல்லை விவகாரம் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் கொள்கை சார்ந்த முடிவுகள் எதையும் மத்திய அரசு எடுக்க முடியாது. அதே சமயம் நிலுவையில் உள்ள சர்வதேச விவகாரங்கள், அண்டை நாட்டு உறவுகள் குறித்து முடிவு செய்ய முடியும். எந்த அறிவிப்பு வெளியிடுவதாக இருந்தாலும் தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெற்ற பிறகே மத்திய அரசால் இனி வெளியிட முடியும். 


சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களிடம் தேர்தல் பணியில் யாரும் பின்புலத்தில் இருந்து அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படக் கூடாது என பிரதமர் மோடி கண்டிப்பாக சொல்லி விட்டாராம்.