என்னுடைய அன்பான நண்பர் விஜயகாந்த்.. பிரதமர் மோடி இரங்கல்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Meenakshi
Dec 28, 2023,11:40 AM IST


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் வேதனை வெளியிட்டு வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி




தேமுதிக தலைவர் விஜயகாந்த், என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தவர். பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின் தொடர்பவர்களுடன் உள்ளன. 


முதல்வர் மு.க.ஸ்டாலின்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  விஜயகாந்த் குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:


அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு  சொந்தக்காரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமாக முத்திரைகளை பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்க தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக சட்டமன்ற உறுப்பினராக எதிர் கட்சி தலைவராக அவர் ஏற்றுக் கொண்ட பணி இதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர் குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.




தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தலைவராக இருந்த போதுத லைவர் கலைஞர் அவர்களின் கலை உலக பண்பு விழாவை பாராட்டி திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்க பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த போது, நேரில் வந்து உடல் நலம் விசாரித்துச் சென்றதுடன், தலைவர் கலைஞர் மறை செய்தியின் போது வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தான் இரங்கலை தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திற்கு நள்ளிவில் நேராக சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தை செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.


தமிழ்  உணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதராக நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகன் நடித்த மக்கள் ஆணையிட்டால் என்ற படத்தில் கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்த காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலில் மாறவே இல்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலம் குன்றிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பனின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.




கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு திரை உலகிற்கும் பேரிழப்பாகும்.  இந்த மிகத் துயரமான சூழலில் என்னை நானே தேற்றிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திரு விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணம் முழுவதும் அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.