அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா.. வேட்டி கட்டி வந்து தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Su.tha Arivalagan
Jan 14, 2024,05:09 PM IST

டெல்லி:  மத்திய அமைச்சர் எல். முருகனின் டெல்லி வீட்டில் இன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழில் பொங்கல் வாழ்த்துகளைக் கூறினார்.


தைத் திருநாளாம் பொங்கல் விழா, தமிழர்களின் மாபெரும் திருவிழாவாகும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.  பொங்கல் விழாவை கடந்த சில நாட்களாகவே கல்வி நிலையங்கள், அலுவலகங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியிலும் இன்று பாஜக சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.




மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை  அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழர்களைப் போலவே வேட்டி கட்டிக் கொண்டு வந்திருந்தார் பிரதமர் மோடி. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் என்று கூறி அவர் பேசவும் செய்தார்.


பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது,  நேற்று நாம் லோஹ்ரியை கொண்டாடினோம். இன்று சில பகுதி மக்கள் மகர சங்கராந்தியைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் நாளை பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்கள். மாக் பிகு பண்டிகையும் வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பொங்கல் விழாவை எனது உறவினர்களுடன் குடும்பத்தினருடன் கொண்டாடுவது போல உணர்கிறேன்.  அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். இந்த நேரத்தில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், வலிமையும் சிறந்து விளங்க நான் வாழ்த்துகிறேன். நாட்டின் ஒற்றுமையை பறை சாற்றும் விழாதான் இந்த பொங்கலும், மகர சங்கராந்தியும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.




தனது பேச்சின்போது,


'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு" என்ற திருக்குறளைச் சொல்லி அதற்குரிய விளக்கத்தையும் கொடுத்துப் பேசினார் பிரதமர் மோடி.


விழாவில்  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகை மீனா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர்.