இஸ்ரோ ஏவுதளத்திற்கு அடிக்கல்.. தூத்துக்குடி விழாவில் பிரதமர் மோடி.. ஆளுநர், கனிமொழி பங்கேற்பு

Manjula Devi
Feb 28, 2024,05:37 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவு தளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி கோவை நேற்று பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மாலை ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து சிறு குறு தொழில் முனைவோர் கூட்டத்தில்  பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பளம் வரவேற்புடன், பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. 30 நிமிடம் தரிசனம் செய்த பிறகு, மதுரை ஆதீனத்திற்கு சென்று அங்கு வழங்கிய மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.


இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு  முதன்மையாக காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ உ சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில்  ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இங்கு முதன் முதலாக சிறிய வகை சவுண்டிங் ராக்கெட்டை ஏவுதற்கு இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம், கடல் நீரை நன்னீராக மாற்றுதல், மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி மையம் உள்ளிட்டவைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  




தமிழகத்திற்கு மொத்தம் 17 , 300 கோடி மதிப்பிலான திட்டங்களையும், அதில் 4,586 கோடி செலவில் நான்கு வழிச்சாலை திட்டங்களையும் தமிழகத்திற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி


நெல்லையில் பிரமாண்ட பாஜக கூட்டம்


தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் காலை 11:10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி பாளையங்கோட்டைக்குச் செல்கிறார். அங்கு பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.